சர்ச்சைக்குரிய நிலங்களில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களைக் குறிக்க சட்டவிரோதக் கோயில் அல்லது கோயில் ஹரம் என்ற வார்த்தையை தாம் பயன்படுத்தியதற்காகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
சிரம்பானில் நேற்று நடைபெற்ற இந்திய சமுதாயத்துடனான நல்லிணக்கச் சந்திப்பில், சுமார் ஐந்து ஆயிரம் பேர் முன்னிலையில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார், "நான் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை ஒரு பழமையான கோவில் கூட இடிக்கப்படவில்லை. ' சட்டவிரோதக் கோவில்' என்று நான் குறிப்பிட்டது தொழில்நுட்ப ரீதியான ஒரு சொல்லாடல். அது தவறுதான். பிரதமரும் ஒரு மனிதன்தான், அவரிடமும் தவறுகள் நடக்கலாம்" என்று டத்தோஸ்ரீ உருக்கமாகக் கூறி இந்திய வாக்காளர்களின் ஆதரவை நாடினார்.
இதனிடையே மலேசியாவில் வாழும் சீனர்களைச் சீனாவுக்கும், இந்தியர்களை இந்தியாவுக்கும் திரும்பிப் போகுமாறு கூறும் குறுகிய இனவாத அரசியலுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தமது உரையில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

"மலேசியாவில் பிறந்து வளர்ந்த சீன, இந்தியச் சமூகத்தினரை வேறு நாடுகளுக்குப் போகச் சொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அத்தகைய போக்கு மக்களைப் பிளவுபடுத்துவதோடு, மனிதப் பேரன்பைப் போதிக்கும் இஸ்லாமிய போதனைகளுக்கும் எதிரானது". என்னைப் பொறுத்தவரை இந்த நாட்டில் உள்ள அனைத்து இன குடிமக்களும் இந்த நாட்டிற்கு உரிமைப்பெற்றவர்களே என்றார்.
"நல்ல மலாய்க்காரர்கள், நல்ல சீனர்கள், நல்ல இந்தியர்கள் மற்றும் ஓராங் அஸ்லி மக்கள் என அனைவரும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமே. அனைத்து இன மக்களின் ஒற்றுமையால் மட்டுமே மலேசியா ஆசியாவின் சிறந்த பொருளாதார நாடாக உருவெடுக்க முடியும்"
இனவாதத்தை தூண்டும் அரசியலை இந்தியர்கள் முற்றாக புறக்கணித்து, மக்களின் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தமது உரையில் கேட்டுக்கொண்டார்.








