அலோர்காஜா, நவ.26-
மலாக்கா, அலோர் காஜா நீதிமன்ற வளாகத்தில் நேற்று அமலாக்க அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பி, ஓட்டம் பிடித்த ஓர் இந்தோனேசிய தடுப்புக்கைதியை பிடிப்பதற்கு மலாக்கா போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க அந்த தடுப்புக்கைதி, இரு கைகளிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையில், நீதிமன்ற கட்டட வேலி கம்பியில் ஏறி, அருகில் உள்ள புதர்பகுதி வாயிலாக தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.
காலை 10.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவனை பிடிப்பதற்கு ஓப் துத்துப் தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அஷாரி அபு சமா தெரிவித்தார்.
அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, மறுவிசாரணை முடிவடைந்து, சுங்கத்துறை வேனில் ஏற்றப்படும் போது, அந்த நபர், சாதூரியமாக தப்பிச்சென்றுள்ளதாக அஷாரி மேலும் கூறினார்.








