குவாங் மூசாங், டிச. 18-
மலேசிய திரெங்கானு பல்கலைக்கழகத்தில் மாணவன் ஒருவன் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு கடுங்காயங்கள் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 க்கும் 22 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 12 மாணவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் உறக்கத்தில் இருந்த தனது 20 வயது மகனை கடுமையாக தாக்கி, காயங்களை விளைவித்ததாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை புகார் அளித்து இருப்பதாக திரெங்கானு மாநில இடைக்கால போலீஸ் தலைவர் வான் முகமட் ஸாக்கி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அப்பல்கலைக்கழக நிர்வாகமும் முழு விசாரணையை தொடங்கியுள்ளது. தாக்கப்பட்ட மாணவன், உடலில் ஏற்பட்ட காயங்களை புகைப்படம் எடுத்து மலாக்காவில் உள்ள தனது தந்தைக்கு அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








