ஜூலை 27-
பல்வேறு சமூகங்களின் மத்தியில் பிளவுகளையும், பேதங்களையும், தவறான புரிதலையும் ஏற்படுத்தி நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கு துடிக்கும் பாஸ் கட்சி, தனது நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயா எம்.பி. Lee Chean Chung கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நாட்டில் உள்ள சீனப்பள்ளிகளுக்கு மானியங்களை அரசாங்கம் வாரிக்கொடுப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வரும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Tuan Ibrahim Tuan Man, உண்மை நிலவரங்களை பார்வையிடுவதற்கு சீனப்பள்ளிகளுக்கு நேரடி வருகை புரிய வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயா எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.
துவான் இப்ராஹிம், சீனப்பள்ளிக்கு நேரடியாக வருகை புரிந்து, உண்மை நிலையை பார்வையிடுவாரோயானால் நாட்டில் சீனக் கல்வியின் வரலாறு, கல்விக்காக சீன சமூகம் வழங்கி வரும் உற்சாகமிகுந்த ஆதரவு, நிதி உதவிகள் மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த சீன தேசிய வகை பள்ளிகளின் நிலை, அவற்றின் தோற்றம் குறித்து தம்மால் வரலாற்றுச் சான்றுகளுடன் மிகத் தெளிவாக விளக்கம் அளிக்க முடியும் என்று Lee Chean Chung குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் புறநகரங்களில் உள்ள மலாய்ப்பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் சீனப்பள்ளிகள் மிகச்சிறந்த வசதிகளை பெற்று இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், சீனப்பள்ளிகளுக்கு அரசாங்கம் அதிக மானியங்களை வாரி கொடுக்கிறது என்று அறிவுக்கு பொருந்தாத சினமூட்டும் அறிக்கையை பாஸ் கட்சித் துணைத் தலைவர் வெளியிட்டு இருக்கிறார்.
அவரின் இந்த செயல், மலேசிய மக்களிடையே பிளவுகளையும், பேதங்களையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். இது போன்று மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டிவிடும் செயலை பாஸ் கட்சி உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று Lee Chean Chung எச்சரிக்கை விடுத்தார்.








