May 14, 2026
Thisaigal NewsYouTube
எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு

Share:

கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அப்பீல் செய்யும் வரையில், எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட்க்கு வழங்க உத்தரவிடப்பட்ட 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை வழங்கி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஹ்மத் ஃபைரூஸ் ஜைனோல் ஆபிதீன், சிறப்புச் சூழ்நிலைகள் காரணமாக இடைக்காலத் தடை வழங்கப்படுவது நியாயமானது என்று தீர்ப்பளித்துள்ளார்.

ஒரே நபருக்கு எதிராக விதிக்கப்பட்ட மிகப்பெரிய நிதித் தொகை, 1.69 பில்லியன் ரிங்கிட் வரி வழக்கில், நஜிப் துன் ரசாக்கிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை, மேலும் அவர் மீது உள்ள குற்றவியல் வழக்குகளில் விதிக்கப்பட்ட இதர அபராதங்கள் ஆகியவை இந்த “சிறப்பு சூழ்நிலைகளில்” அடங்குவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பிரதிவாதி ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் இந்த தீர்ப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தையும் ஒன்றாகக் கருத்தில் கொள்ளும்போது, இடைக்காலத் தடை வழங்கப்பட வேண்டிய சிறப்பு சூழ்நிலைகள் இருப்பது தெளிவாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற அளவில் இறுதியாக தீர்மானிக்கப்படும் வரை எந்த அமலாக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதே சிறந்தது என்றும் நீதிபதி அஹ்மத் ஃபைரூஸ் ஜைனோல் ஆபிதீன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஜூம் வழியாக நடைபெற்ற விசாரணையில், நஜிப், 2 மில்லியன் ரிங்கிட் செலவுத்தொகையை எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், வழக்கில் பெயரிடப்பட்டிருந்த ஐந்து மூன்றாம் தரப்பு பிரதிவாதிகளுக்கு தலா 1 லட்சத்து 50,000 ரிங்கிட் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News