இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்ம் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்துடன் தொடர்புடைய 1.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு விவகாரம் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, இன்று எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் புதிய ஆதாரங்களைத் தாமாக முன்வந்து சமர்ப்பித்துள்ளார்.
இன்று காலை 9.50 மணியளவில் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு வந்த ரபிசி, புதிய ஆதாரங்கள் தொடர்பான விளக்க அறிக்கைகளையும் வழங்குவதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக முன்பு வெளியான ஊடகச் செய்திகள் உள்ளிட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், விசாரணைக்கு உதவக்கூடிய மற்ற சாட்சிகள் இன்னும் அழைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரபிசியிடம் கடந்த வாரம் தொடர்ந்து நான்கு நாட்களாக விசாரணை நடத்திய எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள், 131 பக்கங்களில் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








