பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதுடன், முதலீட்டாளர்களிடையே மலேசியாவின் மதிப்பையும் உயர்த்தியுள்ளதாக முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த பொருளாதார முன்னேற்றத்தின் பயன்களை சாதாரண மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மலேசியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5.3 விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்து, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரை விட முன்னிலை பெற்றுள்ளது.
அதேவேளையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ஆசியாவில் சிறப்பாக செயல்படும் நாணயமாக ரிங்கிட் மதிப்பிடப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அதன் நிலையைத் தக்க வைத்து வருவதாகவும் கைரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஜிடிபி உயர்வு, வேலைவாய்ப்பின்மை குறைவு, ரிங்கிட் மதிப்பு உயர்வு போன்ற பெரிய பொருளாதார எண்ணிக்கைகளின் பயனை சாதாரண மக்கள் இன்னும் உணரவில்லை என்றும் கைரி தெரிவித்துள்ளார்.








