May 14, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

Share:

கடற்படைத் தாக்குதல் ஏவுகணையான என்.எஸ்.எம், மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏவுகணை அமைப்புகளுக்கான ஏற்றுமதி உரிமத்தை இரத்து செய்த நார்வே அரசாங்கத்தின் முடிவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல், செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், மலேசியா தனது அனைத்து பொறுப்புகளையும் நேர்மையாக நிறைவேற்றி வந்ததாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நார்வே அரசாங்கம் அதே மரியாதையையும், நம்பிக்கையையும் மலேசியாவுக்கு காட்ட வேண்டியது அவசியம் என்பதை உணரவில்லை என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் என்பது மிக முக்கியமான மற்றும் பொறுப்புணர்வுள்ள ஆவணங்கள் என்றும், “விருப்பப்படி தூக்கி எறியப்படும் காகிதத் துண்டுகள் அல்ல” என்றும் அன்வார் சாடியுள்ளார்.

ஐரோப்பிய பாதுகாப்பு உபகரண வழங்குநர்கள் எந்தப் பொறுப்பும் இன்றி ஒப்பந்தங்களை மீறுவதற்கு உரிமை கொண்டவர்களாக நடந்து கொண்டால், அவர்கள் மீது வைத்திருக்கும் உத்திசார் கூட்டாளர்களின் நம்பிக்கை முற்றிலும் சிதைந்து விடும் என்றும் அன்வார் எச்சரித்துள்ளார்.

மேலும், ஏற்றுமதி உரிமத்தை ரத்து செய்த நார்வே அரசின் முடிவு, மலேசியாவின் பாதுகாப்பு நடவடிக்கை தயார்நிலைக்கும், கடலோர போர்க்கப்பலான எல்.சி.எஸ் மேம்பாட்டு திட்டத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர்யிடம் தாம் தெளிவாக எடுத்துரைத்ததாக அன்வார் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கு வழங்கப்படவிருந்த ஏவுகணைகளுக்கான ஏற்றுமதி அனுமதியை நார்வே அரசு, ரத்து செய்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்து நேற்று, அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபட்சில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நார்வே அரசாங்கத்தின் இந்த முடிவினால், ஒப்பந்தப்படி ஏவுகணைகளை வழங்க வேண்டிய அந்நாட்டு நிறுவனத்தால் விநியோக நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related News