கோலாலம்பூர், ஏப்ரல்.11-
கோலாலம்பூர் மாநகரத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படும் சட்டத்திற்குப் புறம்பான புகைப்படக் கலைஞர்களை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அண்மையில் KLCC பகுதியில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில், வெளிநாட்டினர் உட்பட விதிகளை மீறிய நபர்களுக்கு ஆறு அபராதங்கள் விதிக்கப்பட்டதோடு, அவர்களின் 11 புகைப்படக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையானது எவரின் வாழ்வாதாரத்தையும் தடுப்பதற்காக அல்லாமல், நாட்டின் தலைநகரான கோலாலம்பூரின் நற்பெயரைப் பாதுகாக்கவும், பொது இடங்களின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிச் செய்யவும் எடுக்கப்படுவதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.








