சிலாங்கூர் மாநிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த 688 இந்து ஆலயங்களும், சன்னதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.
அவற்றில் அரசாங்க நிலங்களில் 433 ஆலயங்களும், தனியார் நிலங்களில் 255 ஆலயங்களும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்களில் பெட்டாலிங் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாகவும், அப்பகுதியில் 96 ஆலயங்கள் அது போல் கட்டப்பட்டுள்ளதாகவும் வி. பாப்பாராய்டு குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, கோலா சிலாங்கூர்-இல் 81 ஆலயங்களும், கோம்பாக் வில் 57, உலு லங்காட் இல் 55, கிள்ளானில் 45, கோல லங்காட்டில் 36, சிப்பாங்கில் 34 மற்றும் உலு சிலாங்கூரில் 29 என மாவட்ட ரீதியான பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதேவேளையில், கோல சிலாங்கூரில் தனியார் நிலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள மொத்தம் 255 ஆலயங்களில், 126 ஆலயங்கள் அப்பகுதியிலும், அதைத் தொடர்ந்து கோலா லங்காட்டில் 38 ஆலயங்களும், சிப்பாங்-இல் 28, உலு சிலாங்கூரில் 22, கிள்ளானில் 20, உலு லங்காட்டில் 12, பெட்டாலிங்கில் 8, சபாக் பெர்னாமில் 2 மற்றும் கோம்பாவில் 1 என்றும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்டத்தில்கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரேகாஸ் சாம்புநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வி. பாப்பாராய்டு மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.








