கடந்த 2018-ஆம் ஆண்டு பவிலியன் ரெசிடென்ஸில் நடத்தப்பட்ட சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட ஆபரணங்கள், 2022-ஆம் ஆண்டிலேயே டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூரின் வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சாட்சியமளித்த புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஃபூ வெய் மின், இரண்டு கட்டங்களாக இந்த ஆபரணங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். ஏப்ரல் 2022-இல் முதல் கட்டமாக 9,554 ஆபரணங்களும், அதே ஆண்டின் இறுதியில் எஞ்சிய 2,431 ஆபரணங்களும் ரோஸ்மாவின் வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அரசாங்கத்தின் பறிமுதல் விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, சட்டத்துறை தலைவரின் உத்தரவின் பேரில் இவை வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
லெபனானைச் சேர்ந்த 'குளோபல் ராயல்டி' நிறுவனம், ரோஸ்மாவிடம் வழங்கப்பட்ட ஆபரணங்களில் தங்களுக்குச் சொந்தமான 43 ஆபரணங்களைத் திரும்பக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது.
எட்டு ஆண்டுகளாக இந்த விவகாரத்தை விசாரித்து வரும் அதிகாரி ஃபூ, "இந்த வழக்கு எனக்கு ஒரு சிம்ம சொப்பனமாக மாறிவிட்டது; இன்னும் நான் ஜோ லோவைத் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். இந்த வழக்கின் விசாரணை நாளை புதன்கிழமை தொடரும்.








