மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாகி வர்த்தகர் ஆல்பர்ட் டே என்பவருக்கு எதிராக ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். சமூக ஊடகங்கள், போட்காஸ்ட் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் வழியாகத் தமக்கு எதிராக வெளியிடப்பட்ட ஆதாரமற்ற மற்றும் உண்மையற்ற கருத்துகளுக்காக, அசாம் பாகி இழப்பீடு கோரியுள்ளதோடு நிரந்தரத் தடை உத்தரவும் கேட்டுள்ளார்.
பொது சேவை துறையில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் பணியாற்றிய அசாம் பாக்கியின் நற்பெயரைப் பாதுகாப்பதற்காகவே இந்த சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சபா அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழலை அம்பலப்படுத்த முயன்றபோது தாம் மிரட்டப்பட்டதாக ஆல்பர்ட் தே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். மேலும், அசாம் பாக்கியின் வழக்கறிஞரால் தமக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கடந்த மே மாதம் அவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.








