நாடெங்கிலும் இந்து ஆலயங்களில் நீண்டகாலமாக நீடித்து வரும் நில உரிமை சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில், கட்டமைக்கப்பட்ட செயல் திட்டத்தை விவரிக்கும் முன்மொழிவு ஒன்றை, தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழுவான NHTSC, பிரதமர் அலுவலகத்தில் நேற்று சமர்ப்பித்துள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பார்வைக்குச் செல்லும் வகையில், பல ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை விவரிக்கும் கடிதம் ஒன்றை NHTSC குழுவினர், நேற்று பிரதமரின் அரசியல் செயலாளரான சான் மிங் காய்-ஐ நேரில் சந்தித்து ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் அமலாக்க நடவடிக்கைகளை, குறைந்தது ஆறு மாத காலத்திற்கோ அல்லது ஒரு நிலையான மற்றும் கட்டமைக்கப்பட்ட தீர்வுக்கு வழிவகுக்கும் வரையிலோ நிறுத்திவைக்க வேண்டும் என்பது, முக்கிய முன்மொழிவுகளில் ஒன்றாகும்.
மேலும், நில உரிமை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆலயங்களுக்கு நிர்வாக ரீதியாக சரியான குறிப்பிடுகையாக “Kuil Tanpa Pendaftaran Tanah” என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று அக்குழு முன்மொழிந்துள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் ஆக்கப்பூர்வம் குறைந்த சொற்களுக்கு பதிலாக முன்மொழியப்பட்ட சொல்லைப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
மலேசிய இந்து சங்கம் அண்மையில் உருவாக்கியுள்ள இந்த NHTSC அமைப்பானது, ஆலயம் தொடர்பான நிலப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மத்திய மற்றும் மாநில முகமைகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்காக, பல்வேறு இந்து அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய ஒருங்கிணைப்பு மேடையாக அங்கீகாரம் பெறவும் முயன்று வருகிறது.
இச்சந்திப்பின் போது, ஆலயம் தொடர்பான விவகாரங்கள் குறித்து இந்திய மற்றும் இந்துச் சமூகத்தினர் எழுப்பியுள்ள கவலைகளைப் பிரதமர் அலுவலகம் புரிந்து கொள்வதாக சான் தெரிவித்துள்ளார்.








