பெட்டாலிங் ஜெயா, ஜூலை 05-
பேரிக்காதான் நசியனால் கூட்டணியின் வாயிலாக, பாஸ் கட்சி கூட்டரசு அரசாங்கத்தை 33 மாத காலம் வழிநடத்திய போது, உலக வங்கி, அனைத்துலக நிதியகம் முதலானவற்றிடமிருந்து கடனுதவியைப் பெறவில்லை.
மாறாக, நாட்டின் சொந்த வருமானத்தைக் கொண்டே, கோவிட்-19 பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு, அப்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக தீர்வு கண்டதாக, பாஸ் கட்சித் தலைவர் தன் ஸ்ரீ ஹாடி அவாங் தெரிவித்தார்.
நேற்றிரவு நடைபெற்ற பினாங்கு, சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பேரிக்காதான் நசியனால்-லின் இறுதிகட்ட மாபெரும் பரப்புரை நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, ஹாடி அவாங் அக்கூற்றை முன்வைத்தார்.
ஆயினும், தேசிய முன்னணியுடன் இணைந்து கூட்டரசு அரசாங்கத்தை வழிநடத்திய காலக்கட்டத்தில், என்ன மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது என்பதை அவர் விவரிக்கவில்லை.
மேலும் பேசிய ஹாடி அவாங், பொருளாதாரம், அனைத்துலக அரசியல் நகர்வு ஆகியவற்றில் தவற்றை புரிந்துள்ள நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தை தண்டிக்கும் வகையில், சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில், அதன் வேட்பாளரை மக்கள் நிராகரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.








