கடந்த ஜூலை 30-ஆம் தேதி உலு சிலாங்கூர் வட்டாரத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர் மரணமுற்றததைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் நலன் மற்றும் பணிச்சுமை குறித்து சமூக ஊடகங்களில் பெரும் கவலை எழுந்துள்ளது.
ஆசிரியர்கள் தங்களின் முதன்மைப் பணியான கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்த ஏதுவாக, கற்பித்தல் அல்லாத இதர நிர்வாகப் பணிகளைக் குறைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, மாவட்ட கல்வி அலுவலக அளவிலான செயல்பாடுகளை மறுஆய்வு செய்து, தேவையற்ற இலக்குகள் மற்றும் வெளிப்புறத் திட்டங்களால் ஆசிரியர்கள் சுமையாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் ஆசிரியர் முகமது ஃபட்லி சாலே இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கிடையில், இந்த மரணத்திற்கான காரணம் குறித்து பொதுமக்கள் எந்தவிதமான ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என்று உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டண்ட் மணிமாறன் முனியாண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.








