கோலாலம்பூர், பிப்ரவரி.02-
வரும் மே 1 முதல் 4-ஆம் தேதி வரையில், புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற திட்டமிடப்பட்டுள்ள 3 நாட்கள் water music festival எனப்படும் நீர் இசை விழா, மலேசிய கலாச்சார விழுமியங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அதன் நிகழ்ச்சி நிரலில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான சில குறிப்பிட்ட அங்கங்கள் அகற்றப்பட்டு மறுசீரமைக்கப்படும் என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நீர் இசை விழாவிற்கு, அண்மையில், சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், சிலர் அதை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இவ்விழாவின் ஏற்பாட்டாளர்கள், இதனை செயல்படுத்துவது குறித்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் சுக்ரி ஓமாரும் வலியுறுத்தினார்.
இவ்விழாவை "வெளிநாட்டு வீதி கொண்டாட்டம்" என வர்ணித்த அவர், இவ்விழாவை முன்னிட்டு, சாலைகள் மூடப்படுவது, நகரத்தின் நாடித் துடிப்பை முடக்குவதோடு, வணிகர்களையும் பொதுமக்களையும் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, ஸாஹிட் மேற்கண்ட அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.








