Jun 27, 2026
Thisaigal NewsYouTube
14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, ஜனவரி.23-

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த நிர்வாகியாகப் பணியாற்றிய நபர் ஒருவர், திருடப்பட்ட 14 லட்சம் ரிங்கிட் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவு , அதனை மறைத்ததாகவும் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

36 வயது விமல் வேணுகோபால் நாயுடு என்ற அந்த முன்னாள் நிர்வாகி, மாஜிஸ்திரேட் எஸ். புனிதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி, ஈப்போ, ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷாவில் உள்ள ஒரு வங்கியில், ஒரு துணை நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 14 லட்சம் ரிங்கிட் திருடப்பட்ட பணம் என்று தெரிந்தே அதைத் தனது வங்கிக் கணக்கில் விமல் வேணுகோபால் பெற்றுக் கொண்டதாக அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 5 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டு விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 411 மற்றும் 424 ஆகிய பிரிவுகளின் கீழ் விமல் வேணுகோபால் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

விமல் வேணுகோபால், இந்தோனேசியாவில் பணியாற்றியதாகவும், அண்மையில் சரவாக், மிரியில் கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை ஈப்போவிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவரின் வழக்கறிஞர் குர்பச்சன் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விமல் வேணுகோபால் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 7 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் புனிதா அனுமதி அளித்தார்.

Related News