Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பேராக்கில் டிங்கி பாதிப்பு அதிரடி உயர்வு: 1,248 சம்பவங்கள் பதிவு; ஒருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

பேராக்கில் டிங்கி பாதிப்பு அதிரடி உயர்வு: 1,248 சம்பவங்கள் பதிவு; ஒருவர் மரணம்

Share:

நாட்டின் பல மாநிலங்களில் டிங்கி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பேராக் மாநிலத்திலும் அந்த நோய்த்தொற்று வீரியமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை, மனிதவள, ஒற்றுமை துறை மற்றும் இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

இன்று பேராக் மாநில அரசாங்க செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய டத்தோ சிவநேசன், இந்த வாரத்தில் மட்டும் மாநிலத்தில் 81 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றார். இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 18.5 விழுக்காடு உயர்வாகும். மேலும், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரை பேராக் மாநிலத்தில் மொத்தம் 1,248 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 18.6 விழுக்காடு அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேரா மாநிலத்திலேயே அதிகளவு டிங்கி பாதிப்பு கிந்தா மாவட்டத்தில்தான் பதிவாகியுள்ளது. கிந்தா மாவட்டத்தில் மட்டும் இந்த வாரத்தில் 68 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், அப்பகுதியில் டிங்கி பாதிப்பு 83.95 விழுக்காடு என்ற கணக்கில் மிகக் கடுமையான உயர்வைச் சந்தித்துள்ளது என்று டத்தோ சிவநேசன் விவரித்தார்.

இதனைத் தொடர்ந்து, டிங்கி நோய் பரவல் அதிகமாக உள்ள சூடான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் சுகாதார அதிகாரிகள் வழியிலான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்று டத்தோ அ. சிவநேசன் உறுதியளித்தார்.

மேலும் பேசிய அவர், இந்த ஆண்டு பேராக் மாநிலத்தில் டிங்கி காய்ச்சலால் ஒரு மரணம் பதிவாகியுள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறினார். உயிரிழந்தவர் 53 வயதுடைய ஆண் என்றும், அவர் கடந்த ஜனவரி மாதம் சிலிம் ரிவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related News