அமைச்சரவை மாற்றத்தில் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐவர், இன்று பிற்பகல் 3 மணியளவில் இஸ்தானா நெகாராவில் மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரி அயாத்துடின் அல் முஸ்தஃபா பிலா ஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
அத்துடன் ஐந்து புதிய அமைச்சர்களும் விசுவாச உறுதி மொழி மற்றும் ரகசிய காப்புப் பத்திரத்திலும் கையெழுத்திட்டனர்.
இலக்கவியல் அமைச்சர் கோபின் சிங் டியொ, சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் மனித வள அமைச்சர் ஸ்தீவென் சிம் சீ, தோட்டம், மூலத் தொழில் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி மற்றும் இரண்டாவது நிதி அமைச்சர் செனாட்டோர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் ஆகியோரே அந்த ஐவர் ஆவார்.
தவிர, துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள இதர ஐவரும் மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
பிரதமர் துறையில் சட்ட சீரமைப்பு துணை அமைச்சர் எம். குலசேகரன், தொழில்முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன், மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நொராய்னி அஹ்மாட், துணை கல்வி அமைச்சர் வொங் கா வோ மற்றும் பிரதமர் துறையின் சமய விவகாரப்பிரிவு துணை அமைச்சர் செனட்டோர் டாக்டர் சுல்கிஃப்லி ஹாஸ்ஸான் ஆகியோரே அந்த ஐவர் ஆவர்.








