செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலைச் சூழலை மாற்றினாலும், மனித கண்ணியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வேலைவாய்ப்புச் சூழலை உருவாக்குவதில் மலேசியா உறுதியாக உள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற 114-வது அனைத்துலக தொழிலாளர் மாநாட்டில் பேசிய டத்தோஸ்ரீ ரமணன், மலேசியாவின் 'மடானி' கொள்கையின்படி எதிர்கால வளர்ச்சி மனிதர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார்.
இதற்காக, மலேசியாவின் 17 மில்லியன் பணியாளர்களுக்கு 'சியாஸ்ட்' மற்றும் 'மைமாஹிர்' மூலம் ஏஐ பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, நிறுவனங்களுக்கு 50 விழுக்காடு கூடுதல் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. மேலும், தொழில் நீதிமன்றங்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. ‘மைபியூச்சர்ஜாப்ஸ்’ தளம் வழியாக 1.49 மில்லியன் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன என்று டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.
முக்கியமாக, இவ்வாண்டு ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி, 10 மில்லியன் தொழிலாளர்கள் பெர்கெசோவின் 24 மணிநேர விபத்துக் காப்புறுதி திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.
இது 1969-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக பணியிடத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.














