பெங்கெராங் தொகுதி மக்கள் 'புலாவ் பத்து புத்தே' விவகாரத்தில் கொண்டுள்ள அதிருப்தியை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனான ஹெலிகாப்டர் பயணத்தின் போது சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் நேரில் விளக்கினார்.
சிங்கப்பூருக்குச் சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யும் மனுவை 2018-இல் மலேசியா மீட்டுக் கொண்டதால், அந்தத் தீவு கைநழுவிப் போனது குறித்து தொகுதி மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்
2018 மே மாதம் துன் மகாதீர் முகமது தலைமையிலான ஆட்சியில் எடுக்கப்பட்ட அந்த முடிவால், ஒரு பொன்னான வாய்ப்பை மலேசியா இழந்ததாக அஸாலினா வருத்தம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய அரச விசாரணை ஆணையம் , துன் மகாதீர் மீது குற்றவியல் விசாரணை நடத்த பரிந்துரைத்திருந்த நிலையில், அவரது வயதைக் கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என அரசாங்கம் சமீபத்தில் முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.








