கோலா திரங்கானு, மே.27-
கோலா திரெங்கானு, செபாட் எண்ணெய் துரப்பண மேடையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, சமூக பாதுகாப்பு நிறுவனமான 'பெர்கேசோ' (PERKESO) மூலம் வாழ்நாள் மாதாந்திர நிதியுதவி மற்றும் மரணச் சகாய நிதியுதவிகள் வழங்கப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
உயிரிழந்த அஹ்மாட் ஃபிக்ரி ஸாகாரியாவின் குடும்பத்திற்கு மாதந்தோறும் 5,355 ரிங்கிட்டும், Muhammad Faezuan Hakim Mohammad Bustamam குடும்பத்திற்கு மாதந்தோறும் 3,105 ரிங்கிட்டும் வாழ்நாள் பலனாக வழங்கப்படும். மேலும், இவ்விரு குடும்பங்களுக்கும் தலா 3,000 ரிங்கிட் மரணச் சகாய நிதியுதவி உடனடியாகச் செலுத்தப்படும்.
திருமணமாகாத, பெற்றோர் இல்லாத ஊழியரான Nik Muhammad Hafifi Asri Ab Majid இறுதிச் சடங்கு செலவிற்காக அவரது அண்ணனிடம் 3,000 ரிங்கிட் ஒருமுறை நிதியுதவியாக வழங்கப்படும்.
இவ்விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் முகமது தவ்பிக் என்ற ஊழியருக்கு தற்காலிக ஊனமுற்றோர் பலன்கள் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிதியுதவிகள் ஒரு வாழ்வாதாரப் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








