ஷா ஆலாம், பிப்ரவரி.04-
உலு சிலாங்கூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் தாக்கியது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர், விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் கூறுகையில், இன்று புதன்கிழமை அல்லது நாளை வியாழக்கிழமை கோலா குபு பாரு நீதிமன்றத்தில் அவர் மீது முறைப்படி குற்றம் சுமத்தப்படும் எனத் தெரிவித்தார்.
தமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, எந்தத் தடையும் இல்லையெனில், இன்று அல்லது நாளை அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஷாஸெலி கஹார் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்துக் கேட்கப்பட்ட போது, விசாரணையில் அந்தச் சந்தேக நபர் "மன உளைச்சலில்" இருந்தது தெரிய வந்தது என்று அவர் கூறினார்.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி புக்கிட் செந்தோசாவில் உள்ள ஜாலான் பகாவாலி இரவுச் சந்தைக்குத் தனது உடன்பிறப்புகளுடன் சென்ற ஒன்பது வயது சிறுமி, அடையாளம் தெரியாத நபரால் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் தொல்லைக்கும் தாக்குதலுக்கும் உள்ளானார் என்று போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.








