ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.23-
பினாங்கில் ஜாலான் பாயா தெருபோங்கிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில், நேற்று, 38 வயதான பெண் ஒருவர் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார்.
அவரது பெரோடுவா மைவி இரகக் காரின் பின் பகுதியில், துணிகள், தலையணை, பெட்டிகள், பைகள் மற்றும் உணவுகள் என பல்வேறு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால், அதன் கதவைத் திறப்பதற்கு சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
அதன் பின்னர், காரின் பின்பக்க கதவின் கண்ணாடியானது உடைக்கப்பட்டு, அவரது உடலானது மீட்கப்பட்டதாக பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டு இயக்குநர் கைருல் அனுவார் முஹமட் ரஹிம் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக மனநல சிகிச்சைப் பெற்று வந்த அப்பெண், தனது காரிலேயே நாள் முழுவதும் தங்கியிருப்பார் என்றாலும் கூட, தினசரி வீட்டிற்கு வந்து விடுவார் என்றும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது மகளின் திடீர் மரணம் அதிர்ச்சியளிப்பதாகவும் அவரது தாயார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், மீட்கப்பட்ட சடலமானது பினாங்கு மருத்துவமனைக்கு சவப்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.








