கூலிம் கிளப்பில் நடந்த கைகலப்பு தொடர்பாக, பாடாங் செராய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 3-ஆம் தேதி, 55 வயது ஆடவர் ஒருவரை கத்தியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பும் புகார் அளித்துள்ள நிலையில், முன்னாள் எம்பி மீது குற்றவியல் சட்டம் 324 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா திசைகளிடம் தெரிவித்தார்.
அதே வேளையில், அந்த முன்னாள் எம்.பி. அளித்த புகாரின் பேரில் காயமடைந்த நபர் மீது திருட்டு மற்றும் காயம் விளைவித்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று டத்தோ அட்லி விளக்கினார்.
இன்று காலை அவ்வ்விருவரும் கூலிம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நாள் தடுப்புக்காவல் வழங்கிய நீதிமன்றம், காயமடைந்த நபரின் தடுப்புக்காவல் கோரிக்கையைத் தள்ளுபடி செய்தது. மேலும், காயமடைந்தவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.











