அலோர் ஸ்டார், ஜனவரி.21-
மலேசியா பேங்க் நெகாரா (Bank Negara) அருங்காட்சியகம் மற்றும் கெடா மாநில அருங்காட்சியக வாரியத்தின் ஒத்துழைப்புடன் "கெம்பாரா உத்தாரா" எனும் வடக்கு நோக்கிய பயணம் பிரம்மாண்டமான கலைக் கண்காட்சி அலோர் ஸ்டார் அருங்காட்சியகத்தில் தொடங்கியுள்ளது.

இக்கண்காட்சியின் தொடக்க விழாவில் கெடா மாநில ராஜா மூடா Tengku Sarafuddin Badlishah Ibni Al-Aminul Karim Sultan Sallehuddin மற்றும் அவரது துணைவியார் ராஜா புவான் மூடா கெடா Che Puan Zaheeda Mohamad Ariff ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு கலைக்கூடத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.
பேங்க் நெகாரா அருங்காட்சியகத்தின் பிரிவின் தலைமை இயக்குனர் நூரின் பிந்தி சுல்கிப்ளி (Noreen Zulkifli) வழங்கிய தகவலின்படி, இக்கண்காட்சி ஜனவரி 12-ஆம் தேதி தொடங்கி, வரும் மே 11, 2026 வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும்.

கெடா, பினாங்கு, பெர்லிஸ் மற்றும் பேராக் ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 80-க்கும் மேற்பட்ட அரிய கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கலைக்கூடத்தில் மலேசியா பேங்க் நெகாரா மற்றும் கெடா மாநில அருங்காட்சியகத்தின் முக்கியமான, சிறப்பான படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.
நூரின் சுல்கிப்ளி மேலும் கூறுகையில், "இந்தக் கலைப்படைப்புகளைப் பார்வையிடும் இரசிகர்கள், வடக்குப் பகுதிகளின் இயற்கை அழகு, அங்குள்ள மக்களின் பல்வேறு சமூக-பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் கலாச்சாரச் செழுமைகளை எடுத்துக் காட்டும் ஆழமான உணர்வுகளைப் பெறலாம்," என்றார்.

கலை என்பது வெறும் காட்சிப் பொருள் மட்டுமல்ல, அது நமது பாரம்பரியத்தின் அடித்தளம் என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு படைப்பும் கலைஞர்களின் தனித்துவமான கண்ணோட்டங்களையும் அனுபவங்களையும் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.








