Aug 27, 2026
Thisaigal NewsYouTube
14.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், தங்கக் கட்டிகளில் முறைகேடு / சொத்துகளை மறைத்ததாக முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

14.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், தங்கக் கட்டிகளில் முறைகேடு / சொத்துகளை மறைத்ததாக முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது குற்றச்சாட்டு

Share:

சொத்துகளை முறையாக அறிவிக்கத் தவறியதாக முன்னாள் பிரதமரும், பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM சட்டத்தின் கீழ் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

14.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், பல்வேறு வெளிநாட்டு நாணயங்களாக இருந்த பல மில்லியன் மதிப்பிலான பணம் மற்றும் தங்கக் கட்டிகள் உள்ளிட்ட சொத்துகளை அறிவிக்கத் தவறியதாக அவர் மீதான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 வயதான இஸ்மாயில் சப்ரி , நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்து விசாரணை கோரினார்.

மேலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டின்படி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009, சட்டம் 694, பிரிவு 36(1)(a)-ன் கீழ், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் விதிமுறைகளுக்கு இணங்காத வகையில், திட்டமிட்டு எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், அந்த அறிக்கையில் அவர் வைத்திருந்த சொத்துகள் மற்றும் நிதி தொடர்பான முழுமையான விவரங்களை அறிவிக்கத் தவறியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி குற்றஞ்சாட்டப்படவிருந்த அவர், உடல்நலக் கோளாறு காரணமாக தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து, விசாரணை இன்று ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News