நாட்டில் புகைமூட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தேசிய தினக் கொண்டாட்டங்களும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலேசிய தினக் கொண்டாட்டங்களும் சுமுகமாக நடைபெறும் வகையில், புகைமூட்ட நிலைமை விரைவில் மேம்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் 80-வது ஆண்டு விழா தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நாட்டில் புகைமூட்டம் மோசமடைந்து வருவதால், 29 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு, வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்கள் மற்றும் சரவாக்கின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று மாலை 6 மணி நிலவரப்படி சரவாக்கில் உள்ள செரியான் பகுதியில் காற்றின் தரம் அதிகபட்சமாக 181 எ.பி.ஐ ஆகப் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிலாங்கூர்-இன் ஜோஹான் செத்தியா மற்றும் சரவாக்-இன் ஸ்ரீ அமான் ஆகிய பகுதிகளில் தலா 173 ஆகப் பதிவானது.
புகைமூட்டத்தின் தாக்கம் குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரை பகுதிகள் மற்றும் சரவாக்கின் சில பகுதிகளில் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.








