கோலாலம்பூர்:
கோலாலம்பூர் வங்சா மாஜு பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில், கூட்டரசு பிரதேச குடியிருப்புப் பிரதிநிதித்துவ மன்ற உறுப்பினர் ஒருவர் 'பாதுகாப்புப் பணம்' கேட்டு மிரட்டியதாக வெளியான வீடியோ தொடர்பாகப் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்துக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சூஸ் கூறுகையில், "இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று புகார்கள் கிடைத்துள்ளன. குற்றவியல் சட்டத்தின் 385-வது பிரிவு மற்றும் 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது," எனத் தெரிவித்தார்.
அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலான சிசிடிவி காட்சியில், தங்களை கூட்டரசு பிரதேச குடியிருப்புப் பிரதிநிதித்துவ மன்ற உறுப்பினர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட இருவர், மசாஜ் நிலையம் ஒன்றில் பணம் கேட்டு மிரட்டுவது பதிவாகியிருந்தது. குடியிருப்பாளர்களின் புகார்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க, 'பாதுகாப்பு கட்டணமாக' இந்தப் பணம் கோரப்பட்டதாகத் தெரிகிறது.








