இந்து ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, சம்பந்தப்பட்ட சமய அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் மலேசிய இந்து சங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.
அவற்றில், ஆலய இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளும் அடங்கும் என அதன் தலைவர் டி. கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், சமய நடைமுறைகள் மற்றும் சட்டவிதிகளுக்கு ஏற்ப தீர்வுகள் காணப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்து சங்கமானது, சுமார் 35 சமய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், குவாலா குபு பாருவில் உள்ள கோயில்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட, குறிப்பிட்ட சில வழக்குகளைத் தீர்ப்பதற்கு மலேசிய இந்து சங்கம் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.
மேலும், இந்து ஆலய விவகாரங்களில் சட்ட வழிமுறைகளை ஆய்வு செய்யவும், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் வழக்கறிஞர்கள் குழு ஒன்றையும் இந்து சங்கம் அமைத்துள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட ஆலயங்களிலிருந்து சிலைகள் இடமாற்றம் செய்யப்படும் போது, சமய நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் டி. கணேசன் குறிப்பிட்டுள்ளார்.








