ஹரிராயாவை முன்னிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாட்டை பொதுவில் அனைத்து வணிகர்களும் முறையாகப் பின்பற்றி வருகின்றனர்.
அதே வேளை சில பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பு விலையை விட குறைவான சில்லறை விலையில் விற்கப்படுவதாக உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
லாபம் ஈட்டும் நோக்கில் விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்பதோடு இளம் சிவப்பு நிறத்திலான விலை அட்டையை வைக்கத் தவறும் வணிகர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம் என அது எச்சரித்தது.
மொத்தம் 27 பொருட்கள் விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் 23 மட்டுமே விலைக் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களாக இருக்கின்றன.
கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய அமலாக்க நடவடிக்கை இம்மாதம் 28 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.
இன்று நான்காவது நாளாக சிலாங்கூர் மாநில அமலாக்கப் பிரிவு புக்கிட் பெருந்தோங்கில் உள்ள லோட்டஸ் பேரங்காடியில் சோதனை நடத்தப்பட்டது. அதில் மாநில புறநகர் மேம்பாடு, ஒற்றுமை மற்றும் பயனீட்டாளர் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஹாஜி ரிசாம்மும் உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சின் மாநில இயக்குனர் துவான் முகமது ஹனிஃப்ப்பும் கலந்து கொண்டனர்.
சிலாங்கூர் மாநில மக்கள் 23 பொருட்களை கட்டுப்படுத்தப்பட்ட விலையில் வாங்கலாம். அதே வேளை, ரஹ்மா மதனி விற்பனைத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பொருட்களை 10த்தில் இருந்து 30 விழுக்காட்டுக் கழிவுத் தொகையில் வாங்கலாம். கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதியில் இருந்து இம்மாதம் 29 ஆம் தேதி வரை அச்சலுகை இருக்கும்.








