அம்பாங், ஆகஸ்ட் 05-
கடந்த சனிக்கிழமை அம்பாங், ஜாலான் பெசார் எங்காங் AU2 இல்
தங்களை Telekom Malaysia குத்தகையாளர்கள் என்று கூறிக்கொண்டு, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான கேபள் கம்பிகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஆறு மியன்மார் பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
அன்றைய தினம் அதிகாலை 2.45 மணியளவில் பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் மேற்பரப்பில் ஐவர், கேபல் கம்பிகளை இழுக்க, ஒருவர், குழியில் இருந்தவாறு கேபல் கம்பிகளை வெட்டிக்கொண்டு இருந்த போது, உலு கிள்ளானிலிருந்து விரைந்த போலீஸ் குழு ஒன்று, அந்த அறுவரையும் வளைத்துப் பிடித்தனர்.
அந்த அறுவரையும் பிடிப்பதற்கு முன்னதாக, அவர்களின் நடவடிக்கை குறித்து போலீசார் வினவிய போது, அதில் ஒருவர், தன்னை Telekom Malaysia குத்தகையாளர் என்று கூறிக்கொண்டு ஒரு கடிதத்தை ஆதாரமாக காட்டியுள்ளார்.
அந்த கடிதம் சந்தேகத்திற்குரியதாக இருந்த நிலையில் அது குறித்து விசாரிக்க Telekom Malaysia- அதிகாரியை சம்பவ இடத்திற்கு வரும்படி போலீசார் அழைத்த போது, அந்த கடிதம் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
20 க்கும் 32 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு மியன்மார் பிரஜைகளும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








