ஜோகூர், குளுவாங் பகுதியில், மசாஜ் நிலையங்களை மையமாகக் கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், உரிய ஆவணங்கள் இல்லாத 25 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முஹமட் ருஸ்டி முஹமட் டாருஸ் கூறுகையில், இரவு 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது, முறைகேடான செயல்பாடுகள் நடைபெறுவதாக சந்தேகிக்கப்படும் குடியிருப்பு பகுதிகளை முக்கிய இலக்காகக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் கைது செய்யப்பட்டவர்கள், வீசெட் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற பிரபலமான டிஜிட்டல் தகவல் தொடர்பு செயலிகள் மூலம் தங்களது சேவைகளை விளம்பரப்படுத்தி வந்ததாகவும், இந்த செயலிகள் பொதுமக்கள் அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக ஜோகூர் பாருவில் உள்ள செத்தியா டிரோபிகா குடிநுழைவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முஹமட் ருஸ்டி தெரிவித்துள்ளார்.








