கோலாலபூர், நவ. 13-
தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்., தனது சந்தாதாரர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான லாப ஈவுத் தொகை, 6 விழுக்காடாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலண்டில் இபிஎப், செயல் திறன் வலுவாக இருப்பதால் சந்தாதாரர்களின் வைப்புத்தொகை நிதியிலிருந்து அதிக லாப ஈவை கொடுக்கும் நிலையில் தொழிலாளர் சேமநிதி வாரியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இபிஎப் சந்தாதாரர்களுக்கான லாப ஈவுத் தொகை வழக்கமான திட்டத்திற்கு சராசரி 5.95 விழுக்காடும் ஷரியா திட்டத்திற்கு 5.43 விழுக்காடும் வழங்கி வந்துள்ளது.
இந்நிலையில் 2024 இல், இபிஎப், இதுவரையில் வலுவான முதலீட்டு வருமானத்தைக்கொண்டு இருப்பதால் தனது சந்தாதாரர்களுக்கு லாப ஈவுத்தொகையாக சராசரி விகிதம் 6 விழுக்காடு வரை வழங்கும் அளவிற்கு சக்தியை கொண்டு இருப்பதாக பொருளியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
இந்த 6 விழுக்காடு லாப ஈவுத் தொகையை வழங்குவது என்பது சாத்தியமாகலாம் என்று சமூகவியல் பொருளாரா ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குநர் லீ ஹெங் கை கூறுகிறார்.
காரணம் தமது நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் பபடி 2024 ஆம் ஆண்டில் லாப ஈவுத் தொகையாக 6.25 விழுக்காடு வரையில் வழங்கக்கூடிய ஆற்றலில் இபிஎப் இருப்பதாக குறிப்பிடுகிறார்.
இவ்வாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் இபிஎப். வலுவான முதலீட்டு வருவாயை கொண்டிருப்பதாக தனது வாதத்திற்கு அந்த பொருளாதார ஆய்வாளர் வலு சேர்க்கிறார்.
இவ்வாண்டின் மொத்த முதலீட்டு வருமானமானது, 2023 ஆம் ஆண்டில் 67 பில்லியன் ரிங்கிட்டை விட அதிகமாக இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்








