கோலா பெராங், மே.17-
திரங்காணு மாநிலம், கோலா பெராங் பகுதியில் போலீசாரின் ரோந்துப் பணியின் போது, துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் அரசாங்க ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 10ஆம் தேதி, மாலை 6.20 மணியளவில், கம்போங் தோக் லாவிட் பகுதியில், போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இச்சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது, Nissan Grand Livina இரகக் காரைச் செலுத்தி வந்த 40 வயதுடைய நபரைச் சோதனை செய்த அதிகாரிகள், அவரிடம் ஆயுதம் இருந்ததைக் கண்டறிந்ததாக உலு திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருடின் அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.
அவரிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு kerambit கத்திகள், ஒரு ஜோடி கைவிலங்கு மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவரிடம் ஆயுதங்கள் எப்படி வந்தது என்பது குறித்தும், அதை வைத்திருந்ததற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








