காஜாங், டிச. 26-
தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வரும் அந்நிய நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர், 33 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.
இச்சம்பவம் நேற்று மாலை 6.34 மணியளவில் காஜாங்கில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது. 19 வயதுடைய அந்த மாணவி கால் இடறி, கீழே விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
வீட்டின் கழிப்பறை கதவு, பூட்டிக்கொண்டு, திறக்க முடியாத நிலையில், கண்ணாடி ஜன்னல் வாயிலாக வெளியேறுவதற்கு அவர் முயற்சி மேற்கொண்ட போது கால் இடறி விழுந்து கீழே இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அவரின் உடல் ரத்த வெள்ளத்தில் 12 ஆவது மாடியில் உள்ள நடைப்பாதையில் கிடந்ததைப் பார்த்த பொது மக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்ததாக ஏசிபி நாஸ்ரோன் தெரிவித்தார்.








