கோலாலம்பூர், ஆகஸ்ட் 24-
கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி Malaysia Airlines, Firefly மற்றும் Amal ஆகிய விமான நிறுவனங்களின் சேவைகளில் இடையூறு ஏற்பட்டதற்காக மலேசிய வான் போக்கு வரத்து குழுமமான MAG நிர்வாக இயக்குநர் டத்தோ கப்டன் இஷாம் இஸ்மாயில் இன்று மன்னிப்பு கோரினார்.
இந்த இடையூறினால் பயணிகளின் அட்டவணையிடப்பட்ட விமானப் பயணங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டதுடன் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்தாக அவர் குறிப்பிட்டார்.
விநியோகிப்பிற்கான சங்கிலி தொடர்பு சேவை, ஆள்பல சேவை முதலியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் எதிர்பாராத காரணங்கள் ஆகியவற்றினால் இந்த இடையூறு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய நிலையில் தாக்கிய கோவிட் 19- நோய் பரவல் காலக்கட்டத்திற்கு பிறகு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் யாவும் வழக்க நிலைக்கு திரும்பும் வரையில் இது போன்ற இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டிய சாத்தியத்திற்கு விமான நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக டத்தோ கப்டன் இஷாம் இஸ்மாயில் விளக்கினார்.
இந்த இடையூறு வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.








