கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கான விமானச் சேவைகள் இன்றிரவு மீண்டும் தொடங்குகின்றன. .
மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா, பாத்திக் ஆயிர் ஆகிய மூன்று விமான நிறுவனங்கள் இன்றிரவு கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு தனது விமானச் சேவைகளை மீண்டும் இயக்குவதற்கு தயாராகி வருகின்றன.
மிக்ஜாம் சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை விமான நிலையம் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் வெள்ள நீர் வடியத்தொடங்கியதை அடுத்து மலேசிய நேரப்படி பிற்பகல் ஒரு மணியளவில் சென்னை விமான நிலையம் மீண்டும் வான் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு புறப்படவிருந்த காலை விமானங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும் இரவில் புறப்படவிருக்கும் விமானங்கள் அட்டவணையிடப்பட்டுள்ளன.
மலேசிய ஏர்லைன்ஸின் MH 180, விமானம் இரவு 9.20 மணிக்கும், ஏர் ஆசியாவின் AK 13, விமானம் இரவு 9.40 மணிக்கும், பாத்திக் ஆயிர் விமானம் இரவு 9 மணிக்கும் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு புறப்பட அட்டவணையிடப்பட்டுள்ளது.







