கோலாலம்பூர், பிப்ரவரி.07-
சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி இன்று சனிக்கிழமை அறிவித்தார்.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், அரசாங்கத்திற்கு 19.5 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தள்ளுபடியானது வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல் அமலுக்கு வரும் நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடைகின்றது.
அதே வேளையில், இச்சலுகையானது Class 1 தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நாட்டின் எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளான Sultan Iskandar கட்டிடம் மற்றும் Tanjung Kupang டோல் சாவடிகளுக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புபவர்கள் மற்றும் ரமலான் மாதத்திற்கு முன்னதாகப் பயணம் செய்பவர்களின் பயணச் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த சலுகையானது வழங்கப்பட்டுள்ளதாக நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தேதிகளானது, அதிகப் பயண நாட்களின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும், நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வுப் பகுதிகளில் கூடுதல் தளவாடங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நெடுஞ்சாலைப் பயனர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, MyPLUS-TTA செயலி மற்றும் LLM TuJu செயலி போன்ற பயணத் திட்டமிடல் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நந்தா லிங்கி வலியுறுத்தியுள்ளார்.








