புத்ராஜெயா, டிசம்பர்.31-
2026-ஆம் ஆண்டை மலேசிய வரலாற்றின் பொன்னான ஆண்டாக மாற்றும் வகையில், தொழிலாளர்களின் நலனையும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் அரசாங்கம் தனது முதல் இலக்காகக் கொண்டுள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் அறிவித்துள்ளார். பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான மடானி அரசாங்கத்தில் எந்தவொரு சமூகமும் நாட்டின் வளர்ச்சியில் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் சூளுரைத்துள்ளார்.
குறிப்பாக, மலேசியாவின் முதுகெலும்பாக விளங்கும் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த அதிக தாக்கம் கொண்ட புதிய திட்டங்கள் இலக்கு வைக்கப்பட்ட முறையில் செயல்படுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை அளித்துள்ளார். "யாரும் கைவிடப்பட மாட்டார்கள்" என்ற முழக்கத்தோடு, அனைத்து இன மக்களும் சமமான வாய்ப்புகளைப் பெறுவதை உறுதிச் செய்வதே புதிய ஆண்டின் முக்கிய நோக்கம் என்று அவர் சுட்டிக் காட்டினார். நாடு முன்னேற வேண்டுமானால் பிளவுகளைத் தவிர்த்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அமைச்சர், 2026-ஐ ஒரு வளமான எதிர்காலத்திற்கான தொடக்கப் புள்ளியாக மாற்ற நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார்.








