ஜோகூர் மாநிலத் தேர்தலில், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படக்கூடிய ஒரு மாநில அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில், பக்காத்தான் ஹரப்பான் அனுபவமிக்க, நம்பகத்தன்மை வாய்ந்த வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது என்று அதன் பொதுச்செயலாளரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் மையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்கள் ஜோகூர் மக்களுக்குத் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய இந்த இணக்கம் அவசியம் என்றார்.
மத்திய அரசின் முக்கிய திட்டங்களான ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் டிசம்பரில் தொடங்கப்படவுள்ள ஆர்.டி.எஸ் ரயில் திட்டம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், இவற்றுக்கு வலுவான மாநில-மத்திய ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம் என வலியுறுத்தினார்.
ஜோகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில், முன்கூட்டிய வாக்குப்பதிவு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.








