கெடா மாநிலத்தில் செல்லுப்படியாகும் ஆவணங்களின்றி தங்கியிருந்ததற்காக, பெலாந்திக் முகாமில் அடைக்கப்பட்டிருந்த இந்தியா, மியான்மார், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 64 ஆண்கள், 35 பெண்கள் என மொத்தம் 99 சட்டவிரோதக் குடியேறிகள் நேற்று மே 13 KLIA வழியாகச் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தண்டனைக் காலத்தை நிறைவு செய்த இவர்களில் சிலருக்கு, தூதரகங்கள் மூலமாக அவசரப் பயண ஆவணங்கள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டதாக கெடா மாநில குடிநுழைவுத்துறை தலைமை அதிகாரி முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார். நாடுகடத்தப்பட்ட 99 பேரும் மலேசியக் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, மீண்டும் நாட்டிற்குள் நுழையத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த, பெலாந்திக் முகாம் தொடர்ந்து இத்தகைய உடனடி நாடுகடத்தல் நடவடிக்கைகளை உறுதியோடு முன்னெடுக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.














