பெத்தாலிங் ஜெயா,ஜன.11
மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தரைவழிப் பயணங்களில் இனி கடப்பிதழ் தேவையில்லா குடிநுழைவு முறை நடப்புக்கு வரவிருக்கிறது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத் திட்டத்தின் கீழ், கியூஆர் ( QR ) குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவு நடைமுறைகளை விரைவாகப் பூர்த்தி செய்வது குறித்து நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது என்று மலேசிய பொருளாதார அமைச்சும், சிங்கப்பூர் வர்த்தக, தொழில்துறை அமைச்சும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சிறப்புப் பொருளியல் வட்டாரம் தொடர்பான கருத்திணக்க ஒப்பந்தம் இன்று ஜோகூர்பாருவில் கையெழுத்தானது.
பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியும், சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வை ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் பார்வையிட்டனர்.
ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொருளியல் பிணைப்பை வலுப்படுத்த உதவும் இத்திட்டத்தை அமல்படுத்துவது மூலம் ஜோகூருக்கும், சிங்கப்பூருக்கும் இடையில் மக்கள் போக்குவரத்து, சுமுகமாக இடம் பெறுவதற்கும், பொருள்கள் தங்கு தடையின்றிச் செல்வதற்கும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








