பெந்தோங், செப்டம்பர்.19-
தாங்கள் முகாமிட்டு இருந்த கூடாரத்தின் மீது மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததில் மாது ஒருவர் மரணமுற்ற வேளையில் மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 7.50 மணியளவில் பெந்தோங், ஜண்டா பாயிக், பூலாவ் சந்தாப் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
15 மீட்டர் உயரமுள்ள மரத்தின் அடிப்பாகத்தில், கூடாரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பலத்த காயத்திற்கு ஆளான மாது, சம்பவ இடத்திலேயே மாண்டார். மேலும் இருவர் பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக காலை 7.56 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப் படையின் பொது உறவு அதிகாரி ஸுல்ஃபட்லி ஸாகாரியா தெரிவித்தார்.
இதில் ஓர் ஆடவரும், ஒரு சிறுவனும் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்த பெந்தோங் நிலையத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட வீரர்கள், கூடாரம் மீது விழுந்து கிடந்த மரத்தை அறுத்து, அகற்றிய பின்னர் காயமுற்ற இருவரையும், உயிரிழந்த பெண்ணின் உடலையும் மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.








