கோலாலம்பூர், பிப்ரவரி.11-
கடந்த 10 ஆண்டுகளில், 193 வழக்குகளில், 327 குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, ஆபத்தான குற்றவாளிகளைக் கைது செய்ய முயற்சிக்கும் போது, அது போன்ற நடவடிக்கைகளைப் போலீசார் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் சரணடைய மறுக்கும் போது பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும், ஆபத்தான ஆயுதங்களுடன் அதிகாரிகளைத் தாக்க முயற்சிக்கும் போது, போலீசார் அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், களத்தில் உள்ள அதிகாரிகளின், உடனடி அச்சுறுத்தல் பகுப்பாய்வின் அடிப்படையில், விரைவான நடவடிக்கை தேவைப்படும் இடங்களிலும் அது போன்ற துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மொத்தம் 172 மலேசியர்கள், 68 இந்தோனேசியர்கள், 24 வியட்நாமியர்கள், 23 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், 7 மியன்மார் நாட்டவர்கள், 3 ஆப்பிரிக்கர்கள், இரண்டு வங்கதேச பிரஜைகள் மற்றும் ஒரு தாய்லாந்து பிரஜை ஆகியோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் நேற்று கெப்போங் எம்பி லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்கு சைஃபுடின் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.








