கோலாலம்பூர், பிப்ரவரி.25-
புக்கிட் காயு ஹீத்தாமில் உள்ள மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான AKPS-இன் தளபதி மீது, இரண்டு ஆயுதமேந்திய நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதிகாலை 6.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, மூத்த உதவி ஆணையர் முஹமட் நசாருடின் எம். நாசீர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
முஹமட் நசாருடின் தனது தொழுகையை நிறைவேற்றச் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படுகிறது.
முஹமட் நசாருடினின் வாகனத்தை நெருங்கி வந்த இருவரும் அவரை நோக்கி இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், முஹமட் நசாருடின் காயமின்றி உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.








