கோலாலம்பூர், நவம்பர்.03-
முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான எம். இந்திராகாந்தியின் மகளைக் கண்டுபிடிக்க உதவுவதில் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுடன் அரசாங்கம் அணுக்கமாக ஒத்துழைக்கும் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி Datuk இன்று உறுதி அளித்துள்ளார்.
இந்திராகாந்தியின் விவகாரம், ஒரு தாய் மற்றும் அவரது குழந்தை சம்பந்தப்பட்டது என்பதால் தாம் அனுதாபம் கொள்வதாக அமைச்சர் நான்சி தெரிவித்தார்.
இறைவன் அருளில் இவ்விவகாரத்தை ஆராய்ந்து, உண்மையான கதை கண்டறியப்படும் அதே வேளையில் குழந்தையைக் கண்டுபிடித்து மீண்டும் தாயாரிடம் ஒன்றிணைக்க எவ்வாறு உதவ முடியும் என்பதைக் கண்டறிய, சாத்தியமான எல்லா வழி முறைகளும் ஆராயப்படும். மேலும் இது தொடர்பாக போலீஸ் துறையுடன் தாம் கலந்து ஆலோசிக்கவிருப்பதாக நான்சி உறுதி அளித்தார்.
தனது பிள்ளையைப் பிரிந்து வாழும் இந்திராகாந்தியின் விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று இன்று மக்களவையில் செபூத்தே எம்.பி. திரேசா கொக் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையில் நான்சி மேற்கண்டவாறு கூறினார்.
தனது பெண் பிள்ளையைத் தன் வசம் வைத்திருக்கும் தனது முன்னாள் கணவர் கே. பத்மநாபன் என்று முகமட் ரித்துவானைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பத்மநாபரின் பெயர் சாரா 100 ரிங்கிட் உதவித் திட்டம் மற்றும் பெட்ரோல் சலுகைத் திட்டமான பூடி95 போன்ற அரசாங்க உதவித் திட்டங்களில் இடம் பெற்றிருப்பது தம்முடைய மகளைக் கண்டுபிடிக்கும் போலீசாரின் நேர்மை குறித்து இந்திராகாந்தி சந்தேகம் எழுப்பியிருப்பது தொடர்பில் திரேசா கொக் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத் திட்டங்களில் பத்மநாபனின் பெயர் இருக்கும் பட்சத்தில் அதில் உள்ள முகவரிக்கு ஏற்ப அந்த நபரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று திரேசா கொக் பரிந்துரை செய்தார்.
தனது முன்னாள் கணவரால் 11 மாதக் கைக்குழந்தையாக இருந்த போது தூக்கிச் செல்லப்பட்ட தனது மகள் பிரசன்னாவிற்கு தற்போது 17 வயது என்று அண்மையில் இந்திராகாந்தி தெரிவித்து இருந்தார்.








