ஜோகூர் பாரு, ஜூன்.14-
ஜோகூர் பாருவில் LGBT சமூகத்தினருக்கான டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி, ஒன்பது ஆண்களைக் குறிவைத்து தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
இது குறித்து ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் Ab Rahaman Arsad இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தேக நபர்கள் டேட்டிங் செயலி மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, பின்னர் அவர்களை காரில் அழைத்துச் சென்று தனிப்பட்ட சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் காரில் இருக்கும் போது, அவ்விடத்திற்கு வரும் மற்றொரு கூட்டாளி, போலீசார் போல் நடித்து, பொதுமக்கள் கூடும் இடத்தில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டுவார் என்றும் Ab Rahaman Arsad தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, பாதிக்கப்பட்டவர்களிடம் மிரட்டல், தாக்குதல் மற்றும் பணம் பறிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவங்களால் மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரத்து 220 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








