தமது மகன் ஆர். தர்வீன் ராஜ்ஜை பாராங்கினால் தாக்கி , 18 வெட்டுக் காயங்களுடன் கொலை செய்தப் பின்னர் சடலத்தை எரியூட்டிய குற்றவாளிகளுக்கு , அவர்கள் புரிந்த கொடுஞ்செயலுக்கு ஏற்ப கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவரின் தாயார் கே. பத்மா வலியுறுத்தியுள்ளார்.
தமது மூத்த மகன் தர்வின் ராஜ் மரணம், ஒரு பேரிடர் என்று நினைத்த மனதை தேர்த்திக்கொள்ள தாம் முயற்சி செய்தாலும் ஒரு தாயின் மனவலி சொல்லி மாளாது. ஈவு இரக்கமின்றி தமது மகனை கொன்று , அவரின் முகத்தைக்கூட பார்க்க முடியாத அளவிற்கு துர்ப்பாக்கியத்திற்கு ஆளான தமக்கு நேர்ந்த கதியைப் போல வேறு எந்த தாய்க்கும் ஏற்பட்டு விடக்கூடாது.
எனவே இத்தகைய கொடூர குற்றவாளிகளை விட்டு விடக்கூடாது. உயரிய கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று 55 வயதான பத்மா கேட்டுக்கொண்டார்.
25 வயதுடைய தர்வீன் ராஜை கொலை செய்ததாக அவரின் மூன்று நண்பர்கள் நேற்று புதன் கிழமை குற்றஞ்சாட்டப்பட்ட மலாக்கா, அலோர் காஜா நீதிமன்றத்திற்கு 12 குடும்ப உறுப்பினர்களுடன் திரண்ட பத்மா, தமது மகனுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பதாகையை ஏந்திய வண்ணம் நீதிமன்றத்திற்கு வெளியே மேற்கண்டவாறு அறைகூவலை விடுத்தனர்.
நெகிரி செம்பிலான்,தம்பின் தாமான் ரியாவை சேர்ந்த தர்வீன் ராஜை வெட்டிக் கொன்றதாக அவரின் நெருங்கிய நண்பர்களான 25 வயதுடை ஏ.ஏ. டினேஷ், ஆர்.சி. வீரகனேஷ் மற்றும் வி.சசிகுமார் ஆகிய மூன்று இளைஞர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
குற்றவாளி என்று நிரூபிக்ப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் மூன்று இளைஞர்களும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








