கோலாலம்பூர், செப்டம்பர்.02-
இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களில் மலேசிய மாணவர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் கூறுகிறார்.
இந்தோனேசியாவில் உள்ள மலேசியக் கல்வி அலுவலகம் மூலம் இது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் மலேசிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக விஸ்மா புத்ராவுடன் இணைந்து உயர்க்கல்வி அமைச்சகம் தொடர்ந்து அந்நாட்டின் நிலைமையைக் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
இந்தோனேசியாவில் 1,200க்கும் மேற்பட்ட மலேசிய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதுவரை, இது போன்ற சம்பவங்களில் மலேசிய மாணவர்கள் ஈடுபட்டதாகத் தங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை என்று அமைச்சர் விளக்கினார்.
இந்தோனேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய இதர அதிகமான அனுகூலங்களை வழங்கும் அந்நாட்டு அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்துப் பொதுமக்களும், மாணவர்களும் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் தலைநகர் ஜாகர்த்தாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகமான சலுகைகளை வழங்கும் திட்டத்தை மக்கள் முழு வீச்சில் எதிர்த்து வருகின்றனர்.








